தமிழ்நாடு
சித்ரா தற்கொலை வழக்கு: தாயார் கொடுத்த புதிய மனுவால் திடீர் திருப்பம்!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தாயார், தமிழக முதல்வர் தனிப் பிரிவில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், ஆர்.டி.ஓ தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஒரு வாரத்துக்கு முன்னர் முடிந்து, அதற்கான 250 பக்க அறிக்கை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேம்நாத் கொடுத்த மன ரீதியிலான துன்புறுத்தல் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹேம்நாத் தந்தை, வெளியிட்ட சித்ரா தொடர்பான சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை வளையத்திற்கு பலர் வரவழைக்கப்பட்டனர். அதன்படி சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், சித்ராவுடன் பணியாற்றியவர்கள் என பலர் விசாரணை செய்யப்பட்டனர்.
குறிப்பாக சின்னத்திரை நடிகை சரண்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரின் வாக்குமூலங்களையும் ஆர்.டி.ஓ தரப்பு காவல் துறையிடம் சமர்பித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த விசாரணையின்படி, ஹேம்நாத் தரப்பிலிருந்து சித்ராவுக்கு வரதட்சணைக் கொடுமைகள் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் சித்ரா, பணிச் சூழல் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சித்ராவின் தாயார், தமிழக காவல் துறை சித்ரா வழக்கில் முறையான விசாரணை செய்யவில்லை என்றும், இதனால் வழக்கை முறையாக விசாரிக்க சிபிசிஐடிக்கு அதை மாற்ற வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை முதல்வர் தனிப் பிரிவில் கொடுத்துள்ளார்.