இந்தியா
ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு சர்ச்சை மீம்: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்!
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக இந்த மீம் இருந்ததால் விவேக் ஓபராயிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விவேக் ஓபராய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது, பெண்களின் மாண்பு மீதும், பெண்கள் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது என மகளிர் ஆணையம் விமர்சித்தது.
இந்நிலையில் தனது செயலுக்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார். சில நேரங்களில் முதலில் பார்க்கும்போது, ஒரு விஷயம் விளையாட்டுத்தனமாகவும், யாரையும் பாதிக்காமலும் இருக்கும். ஆனால் பலருக்கு அப்படி இருப்பதில்லை. நான் கடந்த 10 ஆண்டுகளாக விளிம்புநிலையில் இருக்கும் இரண்டாயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை கொடுத்திருக்கிறேன்.
நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் வெளியிட்ட மீம்ஸ் ஒரு பெண்ணை பாதித்து எரிச்சலடைய வைத்திருந்தால்கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய ட்வீட் நீக்கப்பட்டது என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.