கிரிக்கெட்
INDvENG – கடைசி நம்பிக்கையாக மிளிரும் கோலி; அரைசதம் கடந்தும் அசைக்க முடியாத பேட்டிங்! #Video
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது கேப்டன் விராட் கோலி மட்டும் தான். ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து மளமளவென சரிந்து வர, மறு பக்கத்தில் அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்தியாவின் தோல்வியை கோலியால் தடுக்க முடியுமா என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. உணவு இடைவேளையின் போது 178 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. 420 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை இந்தப் போட்டியை இந்தியா, டிரா செய்தால் அது வெற்றிக்குச் சமமாக மதிக்கப்படும்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் குவிக்க, இந்தியா அதற்கு பதிலடியாக 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் களத்துக்கு வந்த கோலி, அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். தற்போது கோலி 95 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித்து, கலக்கி வருகிறார்.