கிரிக்கெட்

சீரியஸாக பேசிக் கொண்டிருந்த பாண்டியா – அக்சர் படேல்; நடுவில் புகுந்து கலாய்த்த கேப்டன் கோலி #ViralVideo

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் விருதை வென்ற அக்சர் படேலை, இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐ சார்பில் நேர்காணல் செய்தார். அப்போது அக்சர் பற்றி பேசிய பாண்டியா, ‘ஒரு நீண்ட கால நண்பனாக அக்சர் படேலின் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்துக்காக நான் காத்திருந்தேன். அப்படி காத்திருந்த எனக்கு, அக்சர் இப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது’ என்றார்.

தொடர்ந்து அக்சரிடம், மைதானம் குறித்தும், தன் சொந்த மாநிலத்தில் விளையாடுவது குறித்தும், ஆட்டம் குறித்தும் சீரியஸாக பேசத் தொடங்கினார். அப்போது தூரத்தில் இருந்து உள்ளே வந்த கேப்டன் விராட் கோலி, இருவரின் நேர்காணலிலும் உட்புகுந்து கலாய்த்தார். இதை சற்றும் எதிர்பாராத இருவரும் நேர்காணலைப் பொருட்படுத்தாமல் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

கோலி குறும்புத்தனமாக இப்படி உள்ளே வந்து கேலி செய்தது இணையத்தில் படு வைரலாக மாறி வருகிறது.

கோலி கலாய் வீடியோ இதோ:

seithichurul

Trending

Exit mobile version