தமிழ்நாடு
விழுப்புரம் அதிமுக எம்பி கார் விபத்தில் மரணம்!
அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமாகி தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து வைத்தார். இந்நிலையில் அவர்களை வரவேற்க சென்ற விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் கார் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக தலைமை விருந்து அளித்தது. அவர்களை வரவேற்க வந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஜக்காம்பட்டி அருகே உள்ள சர்க்யூட் டவரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
இதனையடுத்து இன்று அதிகாலை அவர் மீண்டும் திண்டிவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் அவரது கார் மிகவும் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எம்பி எஸ்.ராஜேந்திரன் மரணமடைந்தார்.