தமிழ்நாடு
புகார் அளித்த விகாஷின் மனிதாபிமான வேண்டுகோள்: ஜொமைட்டோவின் அதிரடி நடவடிக்கை!
பிரபல உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமைட்டோவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஹிந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய நிறுவனத்தின் ஊழியர் சார்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
ஜொமைட்டோ நிறுவனத்தின் ஊழியரின் இந்த செய்கை காரணமாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்தி தேசிய மொழியா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து புகார் அளித்த விகாஷ் என்பவர் தற்போது ஜொமைட்டோ நிறுவனத்திற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மனிதாபிமானத்துடன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் விகாஸ் வேண்டுகோளை ஏற்று அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக ஜொமைட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
நினைவில் கொள்ளுங்கள், எங்கள் கால் செண்டரில் உள்ளவர்கள் இளைஞர்கள், அவர்கள் தங்களது கற்றல் மற்றும் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் அனைவரும் ஒவ்வொருவரின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஒருவருக்கொருவர் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை எவ்வளவு நேசிக்கிறோமோ அதே அளவுக்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நேசிக்கிறோம். நாம் எவ்வளவு வேறுபடுகிறோமோ அதே அளவுக்கு ஒன்றாகவும் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.