தமிழ்நாடு
பொங்கல் அன்று உதயமாகிறது எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய கட்சி!
நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பொங்கல் அன்று புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சி, தன் மகன் விஜய் பெயரில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதைக் கண்டித்தும், அந்தக் கட்சியில் தன் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த யாரும் இணையக் கூடாது என்றும் கூறி கறார் அறிக்கையையும் வெளியிட்டார் விஜய்.
இதனால் எஸ்.ஏ.சி-க்கும் விஜய்க்கும் கருத்து முரண் இருந்தது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. ஊடகங்களில் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘விஜய் சிலர் பேச்சைக் கேட்டு செயல்பட்டு வருகிறார். எனவே அவரை நான் எச்சரிக்கிறேன்’ என்றார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விஜய்யின் அம்மா ஷோபா, ‘அரசியலைப் பற்றித் தற்போதைக்கு வெளியில் எதுவும் பேச வேண்டாம் என்று விஜய், தந்தை சந்திரசேகரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை’ என்று உண்மையை உடைத்தார். இப்படியான சூழலில், ‘அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சியை, சந்திரசேகர் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தக் கட்சி வரும் பொங்கலன்று தன் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தும் என்றும், தேர்தலில் களத்தில் இருக்கும் எதாவது ஒரு கட்சிக்குத் தங்கள் ஆதரவை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.