தமிழ்நாடு
எங்கள் அப்பாவை ஓழித்துவிட்டீர்கள்; எனக்காவது ஒரு வாய்ப்பு கொடுங்கள்: விஜய பிரபாகரன்
மக்களுக்காக உழைத்த எங்கள் அப்பாவை எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள், எனக்காவது வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் 60 தொகுதிகள் பெற்று இணைந்துள்ள தேமுதிக, தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. விஜயகாந்த் பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயபிரபாகரன் பிரச்சாரத்தில் பேசும் பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆரணியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசியபோது 40 ஆண்டுகாலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர் எங்கள் அப்பா. அப்படிப்பட்ட எங்கள் அப்பாவை மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள். எனக்காவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து நெட்டிசன்கள் கருத்துக் கூறும்போது விஜயகாந்த் கட்சியை நடத்திக் கொண்டிருந்தவரை மக்கள் அவருக்கு நன்றாகத்தான் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எடுத்த சில தவறான முடிவு மற்றும் அவர் உடல் நலம் இல்லாமல் போன பிறகு பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ் கட்சியை நடத்திய விதம் தான் மக்களுக்கு பிடிக்கவில்லை, எனவே தான் தேமுதிக அழிந்தது என்று கூறி வருகின்றனர்.