இந்தியா
நாடாளுமன்றத்தில் தமிழில் எம்.பி ஆகப் பதவி ஏற்றுக்கொண்ட விஜய் வசந்த்!
நடிகர் விஜய் வசந்த் இன்று நாடாளுமன்றத்தில் கன்னியாகுமரி எம்.பி ஆக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இன்று விஜய் வசந்த் பதவி ஏற்றுக் கொண்டார். அவைத் தலைவர் முன்னரும் மக்களவை உறுப்பினர்கள் முன்னரும் தமிழில் உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டார். விஜய் வசந்த் உடன் கூடுதல் 3 பேர் புதிதாக எம்.பி-க்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
கன்னியாகுமரி எம்.பி ஆக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் இடைத்தேர்தலில் கன்னியாகுமரி எம்.பி ஆகப் போட்டியிட்டு வென்றார். இந்த இடைத்தேர்தல் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் உடனேயே நடைபெற்றது.
வெற்றி பெற்ற விஜய் வசந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்ற பின்னர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலேயே ராகுல் காந்தியைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று அவருக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். விஜய் வசந்த் தமிழ் பதவி ஏற்றுக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மக்கள் பிரதிநிதியாக இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டேன். தந்தையின் ஆசி, குமரி மக்களின் நம்பிக்கையும், ஆதரவும் உங்கள் அனைவரது அன்பும் வாழ்த்துக்களும் என்றும் எனது மக்கள் பணிக்கு ஊக்கமளிக்கும். pic.twitter.com/1Siev1OxxU
— VijayVasanth (@iamvijayvasanth) July 19, 2021