சினிமா செய்திகள்

தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு 5 லட்சம் பரிசளித்த விஜய்சேதுபதி!

Published

on

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய்சேதுபதி 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்.

கிழிந்த ஷூவுடன் கோமதி ஓடினார் என்றும், அது நைக்கின் டிசைனர் ஷூ என்றும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கருத்து யுத்தம் நடைபெற்று வந்தது. கிழிந்த ஷூவுடன் கோமதி ஓடிய செய்தி அறிந்த ஜி.வி. பிரகாஷ், கோமதிக்கு புதிய ஷூக்களை வாங்கித் தந்தார்.

தமிழ்நாடு அரசு கோமதிக்கு பரிசுத் தொகை எதுவும் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த எதிர்கட்சிகள் கோமதிக்கு பரிசுத்தொகையை வழங்கினர்.

திமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும், காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளித்தார்.

இந்நிலையில், திருச்சி முடிகண்டம் பகுதியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் மற்றும் முக்கிய மாவட்ட தலைவர்கள் கோமதியை சந்தித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

லாபம் படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதால் விஜய் சேதுபதியால் நேரில் வர முடியவில்லை.

எதிர்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளால் வழிக்கு வந்த தமிழக அரசும் தங்க மங்கை கோமதிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version