விமர்சனம்

முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…

Published

on

தேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி அலையும் விஜய் சேதுபதி ஒரு கும்பலை அடித்து நொறுக்கி எடுக்கிறார். தேனியில் காப்பர் பேக்டரிக்கு முழுமையாக தடை கிடைத்ததா… சினிமா வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்ததா… சென்னையில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு தேனிக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் படம் தான் சங்கத்தமிழன்…

பல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தி… பல முறை வெளியீடு அறிவிக்கப்பட்டு… பல்வேறு வழக்குகளை சந்தித்து வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அப்படியும் இல்லாமல் ஒருவழியாக சனிக்கிழமை வெளியாகியது சங்கத்தமிழன்.
முருகன், சங்கத்தமிழன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இரண்டு விஜய் சேதுபதியா என கேட்காதீர்கள். அது சஸ்பென்ஸ்… சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் முருகனாக சூரியுடன் சில காமெடிகள், சில சண்டைகள்… சில பாடல்கள்… பல பல வசனங்கள்… அதுவும் நீண்ட நீண்ட வசனங்கள் பேசி நடித்துள்ளார்.

தேனியில் பாசக்கார மகனாக அநியாயத்தை தட்டிக் கேட்கும் நல்லவனாக ஊர் மக்களின் பாசக்காரன் சங்கத்தமிழனாக சண்டை செய்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இல்லை.

வழக்கமான தமிழ் சினிமா பாணி தான். மரு வைத்தால் ஒருவன். மரு இல்லை என்றால் மற்றொருவன் என்பதுபோல… மீசை வைத்தால் முருகன்… மீசை இல்லை என்றால் சங்கத்தமிழன் என்பது மட்டுமே இரண்டு பேருக்குமான வித்தியாசம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார் என்று விஜய் சேதுபதிக்கு சொன்னாலும் சொன்னார்கள் மனிதன் நடிக்கவே மாட்டேன் என்கிறார். காதலியாக இருந்தாலும் சரி… வில்லானாகவும் இருந்தாலும் சரி. எம்ஜிஆர் பாணியில் எல்லோரையும் பேசியே சரி செய்கிறார். இவரது பேச்சை சகிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ராஷி கண்ணா சரக்கு அடிக்கும் அளவுக்கு போய்விடுகிறார் என்றால் பாருங்கள். ஒரே ஆறுதல் விஜய் சேதுபதியை திரையில் பார்ப்பதற்கு உருத்தாமல் இருக்கிறார் என்பது மட்டுமே. அந்த ஒரே காரணம்தான் இவரது அவ்வளவு பேச்சையும் சகிக்க வைக்கிறது.

சூரி காமெடி நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு ஓரளவு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதுக்கும் அவர் காரணம் இல்லை… விஜய் சேதுபதியின் டைமிங் வசனங்கள்தான். சூரியுடனான விஜய் சேதுபதி வசனங்கள் மட்டும் சுருக்கமாக நகைச்சுவையாக இருந்தது.

நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகிய இரண்டு கதா நாயகிகள்… இரண்டு விஜய் சேதுபதி என்றால் இரண்டு நாயகிகள் சரிதான் என்றுதானே பார்க்கிறீர்கள். அதான் அதை நான் சொல்ல மாட்டேன் சஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேனே. ஒரு கமர்சியல் படத்தில் ஒருநாயகியின் வேலையை கனகட்சிதமாக செய்துள்ளனர் இருவரும். கொஞ்சம் கவர்ச்சியாகவும் வருகிறார். அழகா இருக்கிறார். பெரிய இடத்துப் பெண் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் நாயகனை காதலும் செய்கிறார் ராஷி கண்ணா. மாமனை காதலித்து அது கை கூடாமல் இறந்து போகிறார் நிவேதா.

கர கர குரலில் அரசியல்வாதியாக ஒருவர்… பெரிய தொழிலதிபராக மற்றொருவர் என வில்லனாக இரண்டுபேர்… இரண்டு விஜய் சேதுபதிக்கு ரெண்டு வில்லன் என்று தானே காட்டுகிறீர்கள்… இல்லை. அந்த இரண்டில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது… விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கும் பெரிய அளவில் இதில் வேலையே இல்லை. தொழிலதிபர், அரசியல்வாதி என்ன செய்வார்கள். ஊருக்கு கெடுதல் செய்து நாயகனின் குடும்பத்தில் ஒருசிலரை கொலை செய்துவிட்டு அடிவாங்குவார்கள்… அதை அப்படியே செய்திருக்கிறார்கள்…

வாலு, ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களுக்கு அடுத்து மூன்றாவதாக சங்கத்தமிழனை இயக்கி உள்ளார் விஜய் சந்தர். உலக சினிமா காட்சிகளைத்தான் எல்லோரும் பார்த்து காப்பி அடிப்பார்கள் என்றால் இவர் தமிழ் சினிமா படங்களையே காப்பி அடித்து வைத்திருக்கிறார். காதல், சண்டை, குடும்பம், நகைச்சுவை என எல்லாவற்றையும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன், சத்யராஜ் போன்றோரின் படங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார். அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ், இசையமைப்பாளர் விவேக் மெர்வின் கமர்சியல் படங்களுக்கு தேவையான தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்துள்ளனர். வேறு என்ன சொல்ல சுமார் என்றா?

என்னதான் சொல்ல வார. இந்தப் படத்தைப்பாக்கலாமா வேண்டாமா எனக் கேட்பது கேட்கிறது. முதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… விஜய் சேதுபதி பேசும் 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் இரண்டாம் பாதியில் சில கணிக்கக் கூடிய ட்விஸ்டுகளோடு உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இல்லை விஜய் சேதுபதி திரையில் வந்தாலே போதும் 2 மணி நேரம் பார்க்கத் தயார் என்றால் நிச்சயம் இது ஒரு நல்ல படமாக உங்களுக்கு இருக்கும்… சுமாரான சுவாரஸ்யமில்லாத முன்கூட்டியே கணிக்க காட்சிகளுடன் கூடிய படம் தான் சங்கத்தமிழன்…

seithichurul

Trending

Exit mobile version