இந்தியா
விஜய் மல்லையாவின் ரூ.152 கோடி மதிப்புள்ள பங்களா: எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 152 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்று ஏலம் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசு தீவிர முயற்சி பெற்றுவருகிறது. ஆனாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விஜய் மல்லையா இன்னும் லண்டனில் தான் இருக்கிறார் என்பதும் அவர் இந்தியாவுக்கு தற்போது வரை அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றிய கடன் கொடுத்த வங்கிகள் அவற்றை ஏலம் விட முடிவு செய்தன. அதன் அடிப்படையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றை ஏலம் விட சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.
ரூ.150 கோடி மதிப்புள்ள இந்த பங்களாவை ஏலமிட இதுவரை 8 முறை முயற்சி செய்தபோதிலும் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து தற்போது மீண்டும் இந்த பங்களாவை ஏலம் விட அறிவிக்கப்பட்டதில் 52.25 கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து ஒரிஜினல் விலையில் இருந்து மூன்றில் ஒரு பங்குதான் ஏலம் போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இந்த பங்களாவை ஏலம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் மற்ற சொத்துக்களையும் ஏலம் விட வங்கிகள் தீவிர முயற்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.