தமிழ்நாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: அடுத்தது சட்டமன்ற தேர்தலா?
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டு நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவை அடுத்து அதிக அளவு கவுன்சிலர்களை பெற்றது விஜய் மக்கள் இயக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 100 கவுன்சிலர்களுக்கு மேல் வெற்றி பெற்றதன் காரணமாக விஜய் மக்கள் இயக்கம் புத்துணர்ச்சியுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி மேயர் தேர்தல் உள்பட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு விஜய் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டு விட்டதாகவும் இதனை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்? யார் யாரை போட்டியிட வைக்கலாம்? என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றால் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் துணிந்து களம் இறங்கும் என்று கூறப்படுகிறது. ஐந்து அல்லது பத்து வருடங்களில் விஜய் கண்டிப்பாக அரசியலில் நேரடியாக குதிப்பார் என ஏற்கனவே கூறப்படும் நிலையில் படிப்படியாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தலில் போட்டியிட வைப்பது விஜய்யின் புத்திசாலித்தனம் களில் ஒன்றாக கருதப்படுகிறது.