தமிழ்நாடு
ஒரு வாரத்தில் வரி செலுத்த தயார்: விஜய் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்!
நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒரு வாரத்தில் வரி செலுத்த தயார் என்று விஜய்யின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் வெளிநாட்டு காரின் வரி குறித்த வழக்கு சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தோடு அவரைப்பற்றி சில கருத்துக்களை நீதிபதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து விஜய் தரப்பில் இருந்து இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விஜய்யின் வழக்கறிஞர் விஜய் நாராயணன் அவர்கள் தற்போது வாதாடி வருகிறார். அவர் இந்த வழக்கு குறித்து கூறிய போது கார் வரி குறித்த வழக்கில் ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் வரிமுறை குறித்து விளக்குங்கள் என்று நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் விஜய்க்கு எதிராக நீதிபதி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்றும் அவரை தேசிய விரோதி போல் சித்தரிப்பது அவசியமற்றது என்றும் கூறினார். நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது என்றும் இதே கோரிக்கையை ஆயிரக்கணக்கானோர் விடுத்து வழக்கு தொடர்ந்த நிலையில் விஜய் மீது மற்றும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டால் விஜய் தனது காருக்கான வரியை ஒரே வாரத்தில் செலுத்தவும் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.