சினிமா செய்திகள்
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஓடிடி ரிலீஸா? ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும், சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி ஓடிடி ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் ஓடிடி ரிலீஸாவது உறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படம் ஓடிடியில் வெளியாவது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு அதிக படங்கள் ரிலீஸாகி கொண்டிருக்கும்போது காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற எதிர்பார்ப்புக்குரிய படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதுமட்டுமின்றி விரைவில் தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில் பெரிய ஸ்டாரின் படங்களை ஓடிடியில் வெளியிடுவது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படமும் அதே ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.