கிரிக்கெட்
பும்ரா மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறார்: நியூசிலாந்து முன்னாள் கேப்டன்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. அனைத்து அணிகளும் இந்திய அணியை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்திய அணியின் செயல்பாடுகள் உள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி மிரட்டி வருகிறது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஆக்ரோஷமான பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணி வீரர்கள் திணறுகிறார்கள். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி பும்ராவை பாராட்டி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, விளையாட முடியாத அளவிற்கு எதிர் அணி வீரர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறார் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராகக்கூட அவர் வழக்கமான ரன் விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மற்ற எல்லா பந்து வீச்சாளர்களையும் குறிவைத்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள், ஹர்திக் பாண்டியா, இறுதி ஓவர்களில் முகமது ஷமி பந்து வீச்சை அடித்து ஆடினர். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஷமி அணியில் இடம் பிடிப்பார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக பந்து வீசினார் என்றார். இந்த போட்டியை அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். காரணம் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அரையிறுதியில் மோதுகின்றனர்.