தமிழ்நாடு
விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றி மாறனின் உருகவைக்கும் போஸ்ட்!
நாடாளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையில் ஒப்புதல் பெற்று, சட்டமானது வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 65 நாட்களுக்கும் மேலாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச ஆதரவு கிடைத்தது.
ஹாலிவுட் நடிகை ரிஹானா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், மற்றும் போர்ன் பட நடிகை மியா கலிஃபா, அமெரித்த துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் இருக்கும் வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் பாஜக அரசின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர் கருத்து கூறி வருகிறார்கள்.
குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இப்படியான சூழலில் தமிழின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றி மாறன், ‘வேறு எப்படியும் தங்கள் குரல்கள் கேட்கப்படாத நிலையில், அதைக் கேட்கச் செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பது தான் போராட்ட முறை. அரசுக்கு அதிகாரத்தை வழங்கியது மக்கள் தான். எனவே அரசு, மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். அதை விடுத்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல் படக் கூடாது. இந்த நாட்டின் ஆன்மாவைப் பாதுகாக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது தான் ஜனநாயகம்’ என்று நெகிழ்ச்சிகர பதிவை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ளார்.