தமிழ்நாடு
ஆபத்து வரலாம்: தமிழக அரசு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மனு
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் ஆபத்து வரலாம் என சுப்ரீம்கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தயாரித்து தர தயார் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்திருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக திறக்க அனுமதி அளிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்ட் தயாரிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே என சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறிய நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வர உள்ளது.
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழக அரசிடம் இல்லை என்றும் அதனால் அது ஆபத்தில் முடியும் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய விசாரணையில் தமிழக அரசுக்கு ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.