தமிழ்நாடு
வேலூர் தேர்தலை நிறுத்த சதி: பரபரப்பு தகவல்!
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
இந்நிலையில் வேலூர் தொகுதி மக்களவை தேர்தலையும், அந்த தொகுதிக்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் திமுக வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்யுமாறு தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு இன்று இந்திய தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், சிபிஐ, மார்க்சிஸ்ட், திருணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜகவின் பிரநிதிகள் தேர்தல் ஆணையர்களிடம், வேலூரில் நடந்த வருமான வரிச் சோதனை பற்றிய புகைப்பட வீடியோ ஆதாரங்களைக் கொடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலையும், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மக்களவைத் தேர்தலோடு அதற்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் நிறுத்திவைப்பதற்கான சதி நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.