தமிழ்நாடு
வேலூர் முள்ளு கத்திரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு.. கர்நாடகாவுடன் போட்டி!
வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள இலவம் பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் முள்ளு கத்திரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
அதே போல ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மிளகாய் அதன் தனித்துவமான காரத்தன்மை மற்றும் செழுமையான சுவைக்குப் பேர் போனது. இந்த குண்டு மிளகாயைச் சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரிலும் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் முள்ளு கத்திரிக்காய்க்கும், குண்டு மிளகாய்க்கு விவசாயிகள் புவிசார் குறியீடு வேண்டும் என விண்ணப்பத்து இருந்தனர். இப்போது இவை இரண்டுக்கும் புவி சார் குறியீடு அறிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இந்த புவிசார் குறியீட்டிற்கான சான்றிதழை அம்மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும்.
மேலும் இந்த புவிசார் குறியீட்டை அடுத்து, அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் 46 பொருட்களுடன் கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது.