தமிழ்நாடு
“முருகனுக்காக அல்ல… எனக்காக தூக்கப்பட்டதுதான் வேல்!”- சொல்கிறார் சீமான்
தமிழக பாஜக, சமீபத்தில் ‘வெற்றிவேல் யாத்திரை’ என்கிற, புதுவித பிரச்சாரப் பயணத்தை நடத்தியது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம், கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்ற பாஜக, தடைகளை மீறி பொதுக் கூட்டங்களை நடத்தியது. இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லையென்றே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக, தமிழ்க் கடவுள் முருகனை முன் வைத்து வேல் யாத்திரை நடத்தியது, தன்னை எதிர்கொள்ளத் தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், ‘முருகனுக்காக எல்லாம் பாஜக வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வேல் யாத்திரை போகவில்லை. என்னை சமாளிக்கத் தான் திடீரென்று முருகனையும் வேலையும் அவர்கள் கையில் எடுத்தார்கள்.
நான், நாம் தமிழர் கட்சியின் ஒரு அங்கமாக வீரத் தமிழர் முன்னணி என்கிற கிளையை ஆரம்பித்து, அதற்குக் கீழ் ‘திருமுருகப் பெருவிழா’ நடத்தினேன். நான் பேசியதைப் பேச வேண்டும் என்பதற்காகத் தான் தற்போது முருகனையும் வேலையும் பாஜக எடுத்துள்ளது.
நான் முதலில் தற்சார்புப் பொருளாதாரம், இயற்கை வேளாண்மை உள்ளிட்டவைகள் குறித்துப் பேசினேன். அதைப் பேச வைக்கவே கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை இங்கு கொண்டு வந்தனர். அவரும் அது குறித்தெல்லாம் பேசினார். ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதைத் தொடர்ந்து தற்போது முருகனை நான் முதலில் பேசியதால், என்னைப் பின்பற்றி அவர்களும் பேசி வருகிறார்கள். ஆனால் அதுவும் எடுபடவில்லை என்பது தான் உண்மை’ என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.