தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்!
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் திமுகவின் தேர்தல் பணிக்குழுவினர் மாநில செயலாளர்கள் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மாவட்ட திமுக செயலாளரும் திமுக உயர்மட்டக் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1957ஆம் ஆண்டு முதல் அரசியலிலிருந்து வரும் வீரபாண்டி ஆறுமுகம் பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி காலமான நிலையில் அவருடைய மகன் ராஜா திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக திமுக தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி உள்ளார் என்பதும் அவருடைய தேர்தல் வியூகங்கள் திமுகவின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்த நாளை அடுத்து அவரது மகன் ராஜா தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.