இந்தியா
அதிதீவிரப் புயலாக மாறியது வாயு புயல்: நாளை கரையை கடக்கிறது!
அரபிக்கடலில் உருவான வாயு புயலானது தற்போது அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. இது குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு வாயு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாயு புயல் வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போது அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் அங்கு கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கப்பற்படை, கடலோர காவல்படைகள் உஷார் நிலையில் உள்ளது. வாயு புயலால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.