இந்தியா
மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுகிறாரா?: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
![Priyanka Gandhi 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/Priyanka-Gandhi-2.jpg)
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் யூகங்கள் பரவி வந்தன. இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் பேசிய பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி அனுமதித்தால் தான் வாரணாசியில் போட்டியிடுவேன் என கூறினார். இதனையடுத்து அவர் வாரணாசியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ் மேலிடமும் பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிட வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதனால் இரண்டு வாரமாக நீடித்து வந்த யூகங்கள் இன்று முடிவுக்கு வந்தது. இதனால் பிரியங்கா காந்தி மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.