சினிமா
நீங்கள் வளர்ந்த விதத்தையே இது காட்டுகிறது: விஷால் மீது வரலட்சுமி காட்டம்!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் என்ற அணி போட்டியிடுகிறது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் சரத்குமார் இல்லாவிட்டாலும் அவரை விமர்சித்து விஷால் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பிரச்சாரம் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ ஒன்றிலும் சரத்குமாரை விமர்சித்துள்ளார். இதற்கு நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷால் தனது தேர்தல் பிரச்சார வீடியோவில் எவ்வளவு கீழே இறங்கியுள்ளார் என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. விஷால் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. குற்றத்தை நிரூபிக்காமலேயே எனது தந்தையின் கடந்த காலத்தைப்பற்றி விஷால் பேசியுள்ளார். எப்போதுமே சட்டம்தான் உயர்வானது என்று விஷால் சொல்கிறார். அவரது கூற்றுப்படி ஒருவரது தவறு நிரூபிக்கப்படாத வரை அவர் குற்றமற்றவர்தான் என்று சட்டம் சொல்கிறது.
எனது தந்தை குற்றவாளியாக இருந்தால் தண்டனை கிடைத்திருக்கும். இந்த மாதிரி கீழ்த்தரமான வீடியோக்கள் நீங்கள் வளர்ந்த விதத்தையே காட்டுகிறது. நீங்கள் ஒன்றும் புனிதரல்ல. உங்களது இரட்டை வேடங்கள், பொய்கள் அனைத்தையும் அனைவரும் அறிவர். நீங்கள் ஏதாவது நல்லது செய்திருந்தால் அதைப் பற்றிப் பேசாமல் தேர்தலில் போட்டியிடாத எனது தந்தையைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?
இவ்வளவு நாள் உங்கள் மீது மரியாதை வைத்து நல்ல நண்பராக இருந்தேன். ஆனால், நீங்களோ உங்களது சாதனைகளைப் பற்றிப் பேசாமல் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். திரைக்கு வெளியிலும் நீங்கள் உண்மையான நடிகர் என நான் நினைக்கிறேன். நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல உண்மை நிலைக்கும் என நம்புகிறேன். எனது வாக்கை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.