தமிழ்நாடு
அப்பல்லோவில் தீவிர சிகிச்சையில் கவிஞர் வைரமுத்து அனுமதி!
பிரபல கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாக சிலரும், சின்மயிக்கு ஆதரவாக சிலரும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
ஆனால் சின்மயி மட்டுமல்லாமல் மேலும் பலரும் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது வைரமுத்துவுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து உடல்நலக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை சென்றிருந்த வைரமுத்து அங்கு பசுமலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.