இந்தியா
மாநிலங்களவையில் வைகோ சொன்ன ஒத்த வார்த்தை: பதறிப்போன வெங்கையா நாயுடு!
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசிய வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்களுக்கு பேச குறைவான நேரம் தான் வழங்கப்படும். இதனால் வைகோ தான் பேச இருந்த கருத்து மிக நீளம் என்பதால் அதனை மின்னல் வேகத்தில் படித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தனது உரையில் வைகோ, ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டத்துக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முறை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் எதிர்ப்புகள் குறித்தும் மேற்கொண்டு மத்திய அரசு வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனுமதிகளையும் சுட்டிக்காடி பேசினார்.
வைகோ தனது உரையில் குறுகிய நேரத்தில் மிக அதிகமான விஷயங்களை தெளிவாக மின்னல் வேகத்தில் குறிப்பிட்டார். அப்போது தனது உரையின் இறுதியில், இந்த அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன் என குறிப்பிட்டார்.
எச்சரிக்கிறேன் என வைகோ கூறியதை கேட்டு அவையில் இருந்தவர்களும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் பதறிப்போய் ஆட்சேபனை செய்தனர். மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் இந்த அவையில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது. கோரிக்கையாக வையுங்கள் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.