தமிழ்நாடு

தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒரு வருட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து வழக்கின் தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கவா? திங்கள் கிழமை அறிவிக்கவா என நீதிபதி கேட்க, உடனே தண்டனையை அறிவியுங்கள் என்று வைகோ தொிவித்தாா். இதனையடுத்து வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். ஆனால் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆயிரம் அபராதத்தை உடனடியாக செலுத்தினார் வைகோ.

seithichurul

Trending

Exit mobile version