தமிழ்நாடு
இந்து தீவிரவாதி கோட்சே: கமல் கருத்துக்கு வைகோ ஆதரவு!
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.
கமலுக்கு அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி பதில் சர்ச்சையை கிளப்பினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கோட்சே செய்தது ஒரு கொடூர செயல் என கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறிருக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்று சொன்னவர்கள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது.
கோட்சேவை பற்றி விமர்சித்தாலே தப்பு என்ற நிலைமைக்கு வருவது என்று சொன்னால் அது மிகவும் பெரிய ஆபத்து. மத நல்லிணக்கத்தை சிதைத்து ஒரு ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என சங்பரிவார் அமைப்புகளும், இந்துத்துவா அமைப்புகளும் சேர்ந்து செயல்படுகின்றன என தெரிவித்தார் வைகோ. முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.