தமிழ்நாடு
மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் வைகோ: கன்னியாகுமரி எல்லைக்குள் வைகோவை விட போலீஸ் மறுப்பு!
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் உக்கிரமாக உள்ளார். மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தும் வைகோ, மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவேன் என முன்னதாக அறிவித்தார்.
அதன்படி பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வர உள்ளார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரல்வாய்மொழியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தியுள்ளார்.
திருநெல்வேலி-கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் வைகோ பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பி வருகிறார். இதனால் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை விட போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்.