இந்தியா
ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்: மாநிலங்களவையில் கெத்து காட்டிய வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து தனது செயல்பாடுகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக தமிழக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைகோ தற்போது ஊடகங்களில் அடிக்கடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இந்திய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பல மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து பேசுகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பேச தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, இது மருத்துவம் குறித்த விவாதம். இதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில் தான் சொல்ல முடியும். எனவே நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வடமாநில உறுப்பினர்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என கூச்சல் போட்டனர். இதற்கு பதில் அளித்த வைகோ, இந்தியில் பேசக்கூடாது. உங்களுக்கு இந்தி வேண்டுமா? இந்தியா வேண்டுமா? உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்துவிடும் என்றார்.
இதனையடுத்தும் வடமாநில உறுப்பினர்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என கோஷம் போட்டனர். அதனைதொடர்ந்து வைகோவும் ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் ஒழியட்டும் என கோஷமிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலையிட்டு, மொழிப் பிரச்சனையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம். இனிமேல் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்றார்.