தமிழ்நாடு
மருத்துவமனையில் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினேன்: வைகோ பேட்டி!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அறிக்கைகள், போராட்டங்கள் மூலம் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சாதாரணை மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் பேசினேன். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார்.