தமிழ்நாடு
வைகோ யாரிடமும் பேசக்கூடாது: மருத்துவர்கள் எச்சரிக்கை!
மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த 18-ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு பரிசோதனை முடிந்த வைகோ சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதிமுக அறிவித்துள்ளது. மேலும் அலைபேசி மூலமாகவோ, மருத்துவமனை தொலைபேசி மூலமாகவோ யாரும் பேச வேண்டாம் எனவும் நேரில் யாரும் சந்திக்க வரவேண்டாம் எனவும் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அன்று இரவு 9 மணிக்கு வைகோவை சந்திக்க ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு அவரிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டுச்சென்றார். நிகழ்ச்சிகளில் இடைவிடாமல் பங்கேற்பதாலும், அதிக நேரம் ஒலிபெருக்கியில் பேசுவதாலும் வைகோவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரை இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கியமாக சிறிது நாட்களுக்கு அமைதியாக இருக்கவும், குறிப்பாக யாரோடும் அதிகமாக பேச வேண்டாம் எனவும் வைகோவுக்கு தடை போட்டுள்ளார்கள் மருத்துவர்கள்.