தமிழ்நாடு

ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தயார் என சொல்லும் ஸ்டெர்லைட்; ‘ஒண்ணும் வேணாம்’ என தரவுகளை அடுக்கிய வைகோ!

Published

on

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணத்தால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு முறையாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம், ‘இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசைக் காட்டமாக சாடியுள்ளது. 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் காப்பர் உற்பத்தி செய்து வந்து, தற்போது நிறுவனத்தை மூடியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் செய்து தர தயார் எனக் கூறியுள்ளது. 

அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ‘இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது கருத்துகள், ஆங்கில செய்தித்தாளில், விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7,000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2,000 டன் ஆக்கித் தருகின்றது.

இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவுக்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது.

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ஆக்சிஜன் ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36 ஆயிரம் லிட்டர் ஆக்க முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்’ எனக் கூறியுள்ளார். 

Trending

Exit mobile version