தமிழ்நாடு
ரத்த ஆறு ஓடும்: தென்காசி பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருவேங்கடம், சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது புல்வாமா தாக்குதலை பாஜக அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.
தரைப்படை, கப்பற்படை, விமானைப்படை என்று முப்படைகளை கொண்ட ராணுவம் நாட்டின் தெய்வம். அதில் அரசியல் செய்யக்கூடாது. நாட்டில் மதசார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்த ஆறு ஓடும் என்றார் வைகோ ஆவேசமாக. தொடர்ந்து பேசிய அவர் நதிகள் இணைப்பு பற்றி நான் எம்.பியாக இருந்தபோதே பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியுள்ளேன். அது தொடர்பாக விவாதமும் நடந்தது என்றார்.