தமிழ்நாடு
கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுக்கிறதா? மனம் திறக்கிறார் வைகைச்செல்வன்!
கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இந்த தேர்தல் ரத்து பின்னணியில் ஒரு குறிப்பிட்ட கட்சி இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்திற்கு இந்த தேர்தல் ரத்து குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கூட்டணி வைக்கவில்லை என்றால் இடைத்தேர்தல்தான் என்று பாஜக மிரட்டுவதாக பரவலாக பேச்சு இருக்கிறதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், பாஜகவுடன் நாங்கள் தொடர்ந்து ராஜரீதியான நட்பை பேணிக்காத்து வருகிறோம். கூட்டணி வைப்பதா? வேண்டாமா? என்பதை எங்களது தலைமைதான் இறுதி முடிவு செய்யும். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு பிறகு அதுகுறித்தான கள நிலவரத்தை அறிந்துதான் அதற்கு உரிய இறுதி முடிவை அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றார்.
மேலும் கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு, பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என வைகைச்செல்வன் கூறினார்.