சினிமா
திடீரென உதயநிதியை சந்தித்த வடிவேலு – பின்னணி என்ன?
24ம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் வடிவேல் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, கடந்த 4 வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருவழியாக பஞ்சாயத்து முடிவுக்கு வந்து அவர் மீது கொடுத்த புகாரை இயக்குனர் ஷங்கர் வாபஸ் பெற்றார்.
தற்போது லைக்காவுடன் 2 படங்கள் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வடிவேலுவே அறிவித்தார். மேலும், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திரைத்துறையில் இந்த பிரச்சனைகளை தீர்க்க வடிவேலுவுக்கு அரசியல் ரீதியான உதவிகளும் கிடைத்ததாக கூறப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் ஆனவுடன் வடிவேலு அவரை சந்தித்து பேசினார். திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் வடிவேலுக்கு ஸ்டாலின் தரப்பில் சில உதவிகளும் கிடைத்துள்ளது. அதன்பின்னரே, பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலினின் மகனும், நடிகர் மற்றும் எம்.எல்.ஏவுமான் உதயநிதி ஸ்டாலினை வடிவேலு இன்று சந்தித்து பேசியுள்ளார். நட்பு ரீதியான சந்திப்பு என வெளியே கூறினாலும், திரைப்படத்துறையில் தனக்குள்ள பிரச்சனைகள் குறித்தும் வடிவேலு அவரிடம் பேசியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.