இந்தியா
விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ்! இது உ.பி அரசின் அட்ராசிட்டி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் போராடிய விவசாயிகளுக்கு 50 லட்சம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சம்பல் மாவட்ட விவசாய யூனியன் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் இதர வழிகாட்டிகளான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சதேந்திர யாதவ், ரவுடாஸ், வீர் சிங் ஆகியோர் மீது 50 லட்சம் ரூபாய் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூக்கிலிட்டாலும் பரவாயில்லை, சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என்று முழக்கிமிடும் அந்த விவசாயிகள், பத்து பைசா கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.