உலகம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா: இதுவரை இல்லாத ‘சாதனை’!
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நாளுக்கான அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். இதுவரை அமெரிக்காவில் 2.04 கோடி பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அங்கு, 3,50,000 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் காரணத்தினாலும், புதுவகை கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வரும் காரணத்தாலும் அங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வந்து, இதுவரை 42 லட்சம் பேர் அதை போட்டுக் கொண்டனர்.
அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் தடுப்பூசி போடுவதில் இருக்கும் சுணக்கங்களால், அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.