உலகம்
அமெரிக்க தேர்தலில் வெற்றியாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… டிரம்பை கிழித்துத் தொங்கவிட்ட பைடன்!
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனை அமெரிக்க தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக வெற்றியடைந்ததாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்பின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றது தானே என்றும் கூறி வருகிறார். தனது வெற்றி குறித்து பைடன், ‘டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க அரசியல் சட்டத்தை மதிக்காமல் நடந்து வருகிறார்கள். மக்களின் எண்ணத்தை டிரம்ப் ஏற்காமல் வீண் முரண்டு பிடித்து வருகிறார். இதற்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. தனது தோல்வியை ஒரு அதிபர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடு.
பல்வேறு வகைகளில் இந்த தேர்தல் மிகவும் கடினமானதாக இருந்தது. அதீத அரசியல் அழுத்தம், வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட போதிலும் மக்கள் வாக்களிக்க முன்வந்தார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் எப்போதோ தழைத்துவிட்டது. அதை எவற்றாலும் தடுக்க முடியாது. நான் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்’ என்று உறுதியளித்துள்ளார்.