உலகம்
ஆப்கன் தாக்குதலுக்கு பதிலடி: அமெரிக்கா தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தலைவர் பலி!
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவில் காபூல் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் சுமார் 170 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் படுகாயமடைந்த ஒரு சிலர் அடுத்தடுத்து மரணமடைந்து வந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 170 என உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது என்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை முழுவதுமாக வெளியேற வேண்டும் என்று நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்திருந்ததாக என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா, ஆப்கனில் உள்ள தீவிரவாதிகள் முகாமில் மீது ஆளில்லா ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கனில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறி வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.