இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநிலங்களவையில் கடும் அமளி!

Published

on

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அது சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. மேலும் லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருவதால், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என கூறினார் அமித் ஷா.

இந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக காஷீர் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

மேலும் பிடிபி எம்பிக்கள் அரசியல் சாசன நகலை கிழிக்க முயன்றதால் அவையில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே கொன்றுவிட்டது என ஆவேசமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமித் ஷா, நாடாளுமன்றத்தில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதை இனி ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. இந்தப் பிரிவின் மூலம் மூன்று குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரில் சுரண்டலில் ஈடுபட்டது என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிக்கையில், 370-வது சட்டப்பிரிவை நீக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version