இந்தியா
உ.பி இன்ஸ்பெக்டர் கொலை.. போலீசிடம் புகார் அளித்தவரும், குற்றவாளியும் ஒரே ஆள்தான்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று அங்கு பசுக்காவலர்களுக்கு திடீர் என்று வந்த போனில், புல்சந்தார் காட்டுப்பகுதியில் 25 பசுமாடுகள் கொல்லப்பட்டு கிடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்று பசுக்கொலை தொடர்பாக கலவரம் நடந்தது.
இதை கட்டுப்படுத்த சென்ற போது சுபோத் குமார் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலையில் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த யோகேஷ் ராஜ்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறான். இவன்தான் கொலை மற்றும் கலவரத்தை தூண்டியது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவன் மீது 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்கு புகார் இருக்கிறது.