உலகம்
உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுப்பா? உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிய வாய்ப்பு!
உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தை சரியும் அபாயம் இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் நாட்டில் போர் பதட்டம் ஏற்பட்டு உள்ளது என்பதும் உக்ரைனில் ரஷ்ய படைகளை குவித்து வருவதால் எந்த நேரமும் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்பதும் ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா இந்த போரில் தலையிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என உக்ரைன் அதிபர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது, ஆனால் அமெரிக்கா இதுகுறித்து கருத்து தெரிவித்த போது நாளை ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் என்று நாங்கள் நம்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த ரஷ்யா தயார் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்றும் கூறியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே போர் மூண்டால் உலகம் முழுவதும் பங்குச்சந்தை பெருமளவில் சரியும் வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உக்ரைனில் போர்ப்பதட்டம் காரணமாகவே நேற்று பெருமளவில் பங்குச்சந்தை சரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.