தமிழ்நாடு
ஆய்வுக்கூட்டங்களில் முதல்வருடன் உதயநிதி: விரைவில் வெளியாகும் துணை முதல்வர் அறிவிப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக ஏப்ரல் மாதத்தில் லண்டன் செல்ல இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தனது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மிக முக்கிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த 9-ஆம் தேதி தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு செயலாளர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வருக்கு அருகில் அமர்ந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த கூட்டத்தில் வேறு எந்த அமைச்சரும் கலந்துகொள்ளாமல் உதயநிதி மட்டும் கலந்துகொண்டது சில யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் மாதத்தில் சிகிச்சைக்காக லண்டன் செல்லவிருப்பதாக தகவல் வருகின்றன. இதனையொட்டி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.