தமிழ்நாடு
சசிகலாவின் காலில் விழுந்துதான் எடப்பாடி முதல்வரானார்: உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்!
![Edappadi and Sasikala - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Edappadi-and-Sasikala.jpg)
நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் வந்தவர் என திமுக பொதுக்கூட்டத்தில் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நேற்று இரவு திமுக சார்பில், அதிமுக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இப்போது உள்ள முதல்வர் பழனிசாமி அடிக்கடி அம்மா வழியில் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
உண்மையில் ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்தால், பெங்களூரு சிறையில் தான் இருப்பார். அமைச்சர் எஸ்.பி வேலுமணி. அவர் வேலுமணி இல்லை, ஊழல் மணி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான ஊழல். குளங்களில் ஆகாய தாமரை அகற்றுகிறேன் என்று கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்தவர்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் அப்போது சிறையில் இருப்பார்கள். கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின் பதவிக்கு வந்துவிட்டதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஸ்டாலின் உழைத்து வந்தவர். பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்து குறுக்கு வழியில் வந்தவர் என்றார் உதயநிதி ஸ்டாலின்.