தமிழ்நாடு
தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் நல்ல மழை பெய்தது. நீலகிரி, கோவை பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. குறிப்பாக நீலகிரியின் கூடலூர், குந்தா மற்றும் மேல் பவானியை சுற்றியுள்ள பகுதிகளில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், மத்திய மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் இரண்டு நாட்களுக்குக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.