தமிழ்நாடு
நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில் மிக அதிகமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் தமிழக அரசு மத்திய அரசிடம் கடிதம் எழுதி தடுப்பூசிகளை வரவழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி மதியத்திற்குப் பின் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள தடுப்பூசி சென்னைக்கு வந்து விடும் என்று கூறப்பட்டது. அதன்படி சென்னைக்கு தற்போது இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து இருப்பதாகவும் இதனை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து நாளை முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வழக்கம்போல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்படும் என மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.