உலகம்
இந்தியர்களை அதிகம் நம்பும் பைடன்.. நிர்வாகத்தின் மற்றொரு உயர் பதவியில் இருவர் நியமனம்
வாஷிங்டன் : தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான அமெரிகார்ப்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் பைடன் நிர்வாகத்தால் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுசேவையில் ஈடுபடும் அமெரிகார்ப்ஸின் மாநில மற்றும் தேசிய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனாலி நிஜவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மேலும் 42 வயதான ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி புதிய வெளிவிவகாரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குல்கர்னி டெக்சாஸிலிருந்து காங்கிரசுக்காக இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியுற்ற போதிலும் வாஷிங்டனில் இருக்கும் தலைமையால் கவனிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் குல்கர்னி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்காக டெக்ஸாஸ் மாகாணத்தின் 22வது இடத்தில் போட்டியிட்டார். ஆனால் குடியரசு கட்சியின் முன்னாள் ஃபோர்ட் பெண்ட் கவுண்டி ஷெரிப் டிராய் நெஹ்லஸிடம் தோல்வியை தழுவினார்.
Also Read: ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..யார் இந்த அரோரா அகன்ஷா?
ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி அமெரிகார்ப்ஸின் சேவை மற்றும் பொது விவகாரங்களில் பல்வேறு அனுபவங்களை உடையவர். வெளியுறவுத்துறையில் 14 ஆண்டுகள் வெளிநாட்டு சேவை அதிகாரியாக பணியாற்றினார். அங்கு அவர் பொது இராஜதந்திர விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் பொது விவகாரங்கள், சர்வதேச தகவல் திட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஈராக், இஸ்ரேல், ஜமைக்கா, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பணியாற்றியும் உள்ளார்.
அதேபோல மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சோனாலி நிஜவன் தன்னுடைய பயணங்களை, தலைவர்களை உருவாக்குவதிலும், வளர்ந்து வரும் தேசிய சேவையில் ஈடுபடுத்தியுள்ளார். சமீபத்தில், அமெரிகார்ப்ஸ் மூலம் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான 12 மில்லியன் டாலர் செலவில் ஸ்டாக்டன் சர்வீஸ் கார்ப்ஸின் நிர்வாக இயக்குநராக அவர் பணியாற்றினார். இவர் மார்க்வெட் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் பால்டிமோர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
அவரது தொழில்முறை பின்னணியில் கல்வியில் விரிவான அனுபவமும் உள்ளது என்று அமெரிகார்ப்ஸ் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சோனாலி நிஜவன் கலிஃபோர்னியா கல்வி முன்னோடிகளின் இயக்குநராகவும் பணியாற்றினார், அங்கு அவர் நகர்ப்புற பள்ளி அமைப்புகள் மற்றும் கல்வி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் மேலாளர்களை நியமித்து ஆதரித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய நியமனம் பைடன் நிர்வாகத்தின் மாறுபட்ட தலைமைத்துவத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அமெரிகார்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்கள் அவர்களுடைய பணிகளில் நிர்வாகத்தின் கொள்கைகளை ஆதரிக்க சேவையை பயன்படுத்துவார்கள், முதலில் இப்போது இருக்கும் மிக முக்கியமான நான்கு பிரச்சனைகளில் கவனம் செலுத்த உள்ளனர். கொரோனா வைரஸ், பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை அந்த பிரச்சனைகள் என்று அமெரிகார்ப்ஸ் தெரிவித்துள்ளது.