கிரிக்கெட்
இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது என்பதும் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடர் தொடங்க இருப்பதை அடுத்து இந்திய அணி இங்கிலாந்து நாட்டிலேயே தற்போது தங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய வீரர்களும் நலமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது என்பதும், இதனை அடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 25ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும், 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதியும் 5வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.